ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 28 Jun 2023 12:08 PM GMT (Updated: 29 Jun 2023 9:58 AM GMT)

பக்ரீத் பண்டிகைைய முன்னிட்டு ராணிப்பேட்டை சிறப்பு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ராணிப்பேட்டை

சிறப்பு சந்தை

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக ராணிப்பேட்டை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இந்த ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் சிறப்பு ஆட்டு சந்தை நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விறபனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

ரூ.2 கோடிக்கு விற்பனை

ஆடுகளை வாங்குவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடுகளின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. எடைக்கு ஏற்ப ஓரு ஆடு ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விலைபோனது.

இது குறித்து ஆட்டு வியாபாரிகளிடம் கேட்டபோது பக்ரீத் பண்டிகை காரணமாக ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சந்தையில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தெரிவித்தனர்.


Next Story