கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதி மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்


கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதி மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்
x

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை மதுரை ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

மதுரை,

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதையடுத்து பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மதுரை ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி அழைத்துவரப்பட்டு நீதிபதிகளில் முன்னாள் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி இன்றைய விசாரணையில் உண்மையை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதிய பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story