விவசாயி கொலை முயற்சி வழக்கு: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


விவசாயி கொலை முயற்சி வழக்கு:  2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

விவசாயி கொலை முயற்சி வழக்கு: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாமக்கல்

புதன்சந்தை அடுத்த கொளத்துபாளையம் அருகே உள்ள சேவாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). விவசாயி. இவர் கடந்த மாதம் 2-ந் தேதி புதன்சந்தையில் இருந்து ஏளூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலர் முருகேசனை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முருகேசனின் வீட்டிற்கு அருகே உள்ள கோழிப்பண்ணை அதிபருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெரம்பலூரை சேர்ந்த விஜயகுமார் (43), கல்குறிச்சி அஜித் (23) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் விஜயகுமார், அஜித் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவு நகலை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் வழங்கினர்.


Next Story