கார், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; ஆசிரியர் காயம்


கார், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; ஆசிரியர் காயம்
x

கார், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் ஆசிரியர் காயமடைந்தார்.

திருச்சி

சமயபுரம்:

துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 54). இவர் வேங்கடத்தானூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று திருவெள்ளறையில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதேநேரத்தில் துறையூரில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சை டிைரவர் நாமக்கல் மாவட்டம், காவல்காரன்பட்டியை சேர்ந்த பழனியாண்டி(வயது 56) ஓட்டினார். திருச்சி-துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை அருகே சென்றபோது, அதே வழியில் சென்ற கார் மீது பஸ் மோதியது. இதில் நிலை தடுமாறிய கார், முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோதி சேதமடைந்தது.

அப்போது பஸ்சை டிரைவர் வலது பக்கமாக திருப்பிபோது, ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதையடுத்து பஸ்சில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சமடைந்து, கூச்சலிடத் தொடங்கினர். மேலும் தொடர்ந்து ஓடிய பஸ் அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு பஸ்சை ஓட்டி வந்த பழனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story