அரசு பஸ் மோதி தொழிலாளி பலி


அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
x

திருச்சிற்றம்பலத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்

தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துறவிக்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையன்(வயது 65). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி காந்தா ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். அவர்களில் மகளுக்கும், ஒரு மகனுக்கும் மட்டுமே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், நேற்று காலை செல்லையன் தனது சைக்கிளில் துறவிக்காட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் துறவிக்காடு சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பணிமனைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக செல்லையன் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில், பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய செல்லையன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த செல்லையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








Next Story