ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு


ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு
x

ரேஷன்கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும், அரசு பணியாளர்களுக்கு வழங்கும் 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ரேஷன்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அகவிலைப்படி உயர்வு

கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.2.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14 சதவீத அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.

1.1.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து 1.1.2022 முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

22 ஆயிரத்து 500 பணியாளர்கள் பயன்

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் 19 ஆயிரத்து 658 விற்பனையாளர்கள் மற்றும் 2 ஆயிரத்து 852 கட்டுநர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.73 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story