தத்ரூபமாக நடித்து காட்டிய அரசு பள்ளி மாணவிகள்
கலை திருவிழாவையொட்டி, தத்ரூபமாக அரசு பள்ளி மாணவிகள் நடித்து காட்டினர்.
வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் கலை திருவிழா நடந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியை நாகராணி தலைமை தாங்கினார். சாதி, மத, இன வேறுபாடு களைதல், மாற்றுத்திறனாளிகளை மதித்தல், கல்வி கற்பதன் அவசியம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேடமணிந்து நாடகங்களை தத்ரூபமாக மாணவிகள் நடித்து காண்பித்தனர்.
இதேபோல் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில் நடன நிகழ்ச்சி நடந்தது. மாணவிகள் நளினத்துடன் நடனம் ஆடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இலக்கிய சுவையுடன் மாணவிகள் கவிதைகள் வாசித்து அசத்தினர். நாடகம், நடனம், கவிதை என மாணவிகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். 6 முதல் 8, 9-10, 11-12 என்ற வகுப்புகளின் அடிப்படையில் மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழிகளுக்கு விருந்து படைத்த கலைநிகழ்ச்சிகளை பெற்றோர்கள், ஆசிரியைகள், மாணவிகள் கண்டு ரசித்தனர்.