ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக்கொலை: போலீசார் தீவிர விசாரணை


ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக்கொலை: போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 20 Aug 2023 8:02 AM GMT (Updated: 20 Aug 2023 9:21 AM GMT)

ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் இவரது மனைவி புவனேஸ்வரி (53). வைரா பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். மனோகரன் நடை பயிற்சி முடித்துக் கொண்டு 8.30 மணிக்கு வீட்டுற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சூரம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். மோப்பநாய் வீரா சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் வெளியே ஓடி நின்றது.

இது குறித்து சூரம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story