மாநகராட்சி குப்பை கிடங்கில் அரசு செயலாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சி வெள்ளைகல் குப்பை கிடங்கில் அரசு செயலாளர் ஆய்வு செய்தார்
மதுரை மாநகராட்சி வெள்ளைகல் குப்பை கிடங்கில் அரசு செயலாளர் ஆய்வு செய்தார்.
ஆய்வு கூட்டம்
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாக இயக்குனர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
அதில் மாநகராட்சி கமிஷனர்கள் கே.ஜே.பிரவீன்குமார் (மதுரை), சிவகிருஷ்ணமூர்த்தி (நெல்லை), ஆனந்தமோகன் (நாகர்கோவில்), தினேஷ்குமார் (தூத்துக்குடி), நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள் முஜிபூர்ரகுமான் (மதுரை), விஜயலெட்சுமி (நெல்லை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி திட்ட பணிகள்
இந்த கூட்டத்தில் அந்தந்த மாநகராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், அம்ரூத் குடிநீர் திட்டப்பணிகள், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் மாநகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதரகழிவுகளை பிரிக்கும் இடங்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தையும் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அலுவலர்களுக்கு உத்தரவு
தொடர்ந்து அவர், அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக தெப்பக்குளம் ஐராவதநல்லூர் பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெரியார் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சரவணன், தயாநிதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






