பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்


பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்
x

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், இதுவரை அந்த பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. அதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பட்டம் வழங்குவது தாமதப்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக துணை வேந்தர்கள், பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

எனவே, மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு கவர்னர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் நலன்களை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story