ஆன்லைன் ரம்மி சட்டம்; கவர்னர் ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்- அமைச்சர் ரகுபதி


ஆன்லைன் ரம்மி சட்டம்; கவர்னர்  ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்- அமைச்சர் ரகுபதி
x

கோப்புப் படம்

தினத்தந்தி 28 Nov 2022 9:54 AM GMT (Updated: 28 Nov 2022 10:12 AM GMT)

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர்.

புதுக்கோட்டை,

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார்

அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. நேற்று மாலைக்குள் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்" என்றார்.


Next Story