ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி


ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி
x

ஜன்னல் கண்ணாடி உடைந்து குத்தியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலி.

பெரம்பலூர்,

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை ஏ.வி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவருடைய மனைவி சம்பூர்ணம் (50). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வராஜ் லாடபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சம்பூர்ணமும் அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தற்போது பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையால் தம்பதியினர் வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் செல்வராஜ் நேற்று முன்தினம் மாலை பாளையத்தில் உள்ள வீட்டிற்கு புத்தகங்களை எடுக்க சென்றார். அப்போது அவர் ஜன்னலை திறக்க முயன்றபோது திடீரென்று கண்ணாடி உடைந்து சரிந்து செல்வராஜூன் வலது கையில் குத்தியது.

இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story