விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 7 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 6:46 PM GMT)

செஞ்சி கூட்டுரோட்டில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விழுப்புரம்

செஞ்சி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மணிகண்டன்(வயது 23). இவர் கடந்த 12.12.2011 அன்று தனது இருசக்கர வாகனத்தில் ஆலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மணிகண்டனின் தந்தை முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனது மகனின் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் கிருஷ்ணன் மூலம் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் முனுசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 4.12.2018 அன்று பாதிக்கப்பட்ட முனுசாமிக்கு ரூ.6 லட்சத்து 56 ஆயிரத்து 40 நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு வரை நஷ்ட ஈட்டு தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 7 ஆயிரத்து 656 வழங்க வேண்டும் என அப்போதைய நீதிபதி உத்தரவிட்டார். அப்போது கோர்ட்டில் செலுத்தி இருந்த டெபாசிட் தொகை உள்பட ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்து 983 நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. மீதி தொகை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 901-ஐ இதுவரை வழங்காததால் முனுசாமி மீண்டும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தற்போதைய நீதிபதி நலினகுமார் பாக்கி நஷ்ட ஈட்டுதொகை ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 901 உடன் வட்டியும் சேர்த்து முனுசாமியிடம் வழங்க வேண்டும் தவறினால் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் பாக்கி நஷ்ட ஈட்டுதொகையை அரசுபோக்குவரத்து கழகம் வழங்காததால் நேற்று புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பஸ்சை செஞ்சி கூட்டு ரோட்டில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Next Story