157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

காந்தி ஜெயந்தியையொட்டி 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி உள்ள 157 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் க.பரமத்தி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்திற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ முன்னிலை வகித்தார். க.பரமத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 100 நாள் வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவிப்பது, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

குறுஞ்செய்தி ஒளிபரப்பு

முன்னதாக முதல்-அமைச்சரின் கிராமசபை தொடர்பாக விழிப்புணர்வு குறுஞ்செய்தி பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அதனை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் க.பரமத்தி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சேவைகளை பாராட்டி சீருடை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தோகைமலை

தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி கழுகூர் ஊராட்சியில் தலைவர் முத்துச்சாமி, கூடலூரில் தலைவர் அடைக்கலம், ஆர்.டி.மலையில் தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, கள்ளையில் தலைவர் கருப்பையா, வடசேரியில் தலைவர் சரவணன், தோகைமலையில் தலைவர் தனமாலினி கந்தசாமி, சின்னையம்பாளையத்தில் தலைவர் பழனிச்சாமி, ஆர்ச்சம்பட்டியில் தலைவர் தேவிகா கோவிந்தராஜ், கல்லடை கீழவெளியூரில் தலைவர் ராஜலிங்கம், ஆலத்தூரில் தலைவர் ஜெயபால், பில்லூரில் தலைவர் லெட்சுமி பழனிச்சாமி, பொருந்தலூரில் தலைவர் சத்யா ராமசந்திரன், தளிஞ்சியில் தலைவர் மனோகரன், பாதிரிபட்டியில் தலைவர் பாப்பாத்தியம்மாள் சக்திவேல், முதலைபட்டியில் தலைவர் மணிகண்டன், புத்தூரில் தலைவர் தணிகாசலம் ஆகியோர்தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி செயலாளர்கள் தீர்மானங் களை வாசித்தனர். இதில், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நொய்யல்

காந்தி ஜெயந்தியையொட்டி நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் குறுக்குச்சாலை பங்களா நகரில் உள்ள பூங்காவில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத்தலைவர் சோமசுந்தரம், முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரகுபதி வரவேற்று பேசினார்.

இதேபோல் கோம்புபாளையம் ஊராட்சி சார்பில் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத்தலைவர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வரவேற்று பேசினார்.

இதேபோல் திருக்காடுதுறை ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நளினி வரவேற்று பேசினார். இதேபோல் என்.புகழூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் இந்து வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story