241 ஊராட்சிகளில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம்


241 ஊராட்சிகளில் மே 1-ந்தேதி கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1-ந்தேதி(திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று 241 ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1-ந்தேதி(திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று 241 ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

241 ஊராட்சிகளில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே1-ந்தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், 2022-23, 2023-24 -ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகம், கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற விவரம் குறித்து விவாதிக்கப்படும்.

வாசகர்கள் குழு

2023-24-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் விவரம், இந்த திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகங்களில் "வாசகர்கள் குழு" உருவாக்குவது குறித்தும் அதன் பயன்களையும் தெரிவிக்கப்படவுள்ளது.

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுகாதாரம், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

ஜல் ஜீவன் இயக்கம்

நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரவக்கழிவு மேலாண்மை நடடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில்கள், வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை குறித்து இந்த கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, இக்கிராமசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை கிராமசபை கூட்டத்தில் விவாதித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story