121 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்


121 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
x

காந்தி ஜெயந்தியையொட்டி பெரம்பலூரில் உள்ள 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை (திங்கட்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபை கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.

அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராம சபை கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருட்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கடந்த ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், 2023-24-ம் ஆண்டிற்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், 2022-23-ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

கண்காணிக்க...

கிராமசபை கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களான வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைத்துத்துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்களை பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும்.

கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story