அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்


அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
x

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவான நாளை (திங்கட்கிழமை) கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது. கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில், கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து, அரசு நலத்திட்டங்களை வழங்குவதோடு, அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரிடம் இருந்து பெறப்பட்ட கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.

கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி உரிய மரியாதையை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் கொடியை ஏற்றுவதாக, குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story