கிராம ஊராட்சி தலைவர், 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9-ந் தேதி இடைத்தேர்தல்-வேட்பு மனு தாக்கல் இன்று முதல் செய்யலாம்


கிராம ஊராட்சி தலைவர், 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9-ந் தேதி இடைத்தேர்தல்-வேட்பு மனு தாக்கல் இன்று முதல் செய்யலாம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) முதல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

இடைத்தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பெரம்பலூர் ஒன்றிய மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆலத்தூர் ஒன்றிய இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பூர் ஒன்றிய கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் ஒரு கிராம ஊராட்சி தலைவர், 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு ஜூலை மாதம் 9-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல்

தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது.

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்றத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 28-ந்தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30-ந்தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெறுவோர் பெற்று கொள்ளலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

முன்னேற்பாடு பணிகள்

அடுத்த மாதம் 9-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 12-ந்தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 14-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டில்

சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 17-ந்தேதி தொடர்புடைய ஒன்றியம், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் 5.1.2022-ம் தேதி வெளியிடப்பட்ட சட்டமன்ற வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பித்து அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம். அதன் அடிப்படையில் கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் சேர்க்கப்படும்.

6,959 பேர் வாக்களிக்கிறார்கள்

மேலப்புலியூர் கிராம ஊராட்சியில் நடைபெறவுள்ள கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 2,424 ஆண் வாக்காளர்களும், 2,505 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். இரூர் கிராம ஊராட்சி வார்டு எண் 1-ல் 260 ஆண் வாக்காளர்களும், 267 பெண் வாக்காளர்களும், பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4-ல் 105 ஆண் வாக்காளர்களும், 112 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

வி.களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7-ல் 66 ஆண் வாக்காளர்களும், 204 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். கீழப்புலியூர் கிராம ஊராட்சி வார்டு எண் 8-ல் 454 ஆண் வாக்காளர்களும், 462 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் 3,409 ஆண் வாக்காளர்களும், 3,550 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,959 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


Next Story