அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி


அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

கோவை சொக்கம்புதூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை

மகா சிவராத்திரி விழாவையொட்டியும், மாசி மாத அமாவாசையை முன்னிட்டும் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் நள்ளிரவில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும். இதுபோன்று கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுகாட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றும். அதன்படி இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுடுகாட்டு மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்து. பின்னர் பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி மாசாணி அம்மனை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து மாசாணியம்மனின் இதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை எடுத்து வாயில் கடித்தபடி எடுத்து பூசாரி ஆக்ரோசமாக சாமியாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூசாரியின் ஆக்ரோச ஆட்டத்தை பார்த்து பக்தர்கள் ஆரவாரத்துடனும், பரவசத்துடனும் மாசாணியம்மனை வழிபட்டனர். பின்னர் மாசாணியம்மன் சிலையில் இருந்து மண் எடுத்து செல்லப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடத்தப்படும் மயான கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்டு வழிப்பட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருக்கல்யாணம் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.


Next Story