விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ளஅங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சிஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்


விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ளஅங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சிஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:45 PM GMT)

விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழுப்புரம்


விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு 27-ம் ஆண்டாக மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை, மகா ஹோமமும், 8 மணியளவில் மேல்வன்னியர் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வருதலும், 9.30 மணியளவில் மகா அபிஷேகமும், 10 மணிக்கு பாலாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மாலை 5 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மயானக்கொள்ளை நிகழ்ச்சி

அதன் பின்னர் மாலை 6 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கத்தி, சூலம், கபாலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயான காளியாய் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் சிலர், அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் பூந்தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு விநாயகர், வீரபத்திரர், அங்காளம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பூந்தோட்டம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story