தர்மபுரியில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்; 78 மனுக்கள் மீது உடனடி தீர்வு


தர்மபுரியில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்; 78 மனுக்கள் மீது உடனடி தீர்வு
x
தினத்தந்தி 14 Jun 2023 7:30 PM GMT (Updated: 15 Jun 2023 4:35 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 78 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டனர். நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத்தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 79 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

உடனடி தீர்வு

போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 78 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள ஒரு மனு மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.



Next Story