நாமக்கல்லில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


நாமக்கல்லில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 296 மனுக்களை கலெக்டர் உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மேலும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 296 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் உமா, அவற்றை பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே வருவாய்த்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், பசுமை நாமக்கல் செயலாளர் தில்லைகுமார் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் அலுவலர்களுக்கான முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95 ஆயிரத்து 580 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையையும் கலெக்டர் உமா வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை அவர் நேரில் சந்தித்து மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story