காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை


காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
x

நெல்லையில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லையில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதலன் தற்கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகள் சிவகாமி (வயது 19). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் தனது உறவுக்கார வாலிபர் ஒருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அந்த வாலிபர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவகாமியை அவரது பெற்றோர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் சாவு

இந்த நிலையில் அந்த வாலிபரின் பிறந்த நாள் கடந்த மாதம் வந்தது. இதனால் வெளியூரில் இருந்து வந்த சிவகாமி தனது காதலனின் கல்லறைக்கு சென்று அங்கு கேக் வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் காதலனை நினைத்து மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் சிவகாமி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story