விழுப்புரத்தில்சிறுமி கூட்டுபாலியல் தொல்லைக்கு ஆளானதை போலீஸ் மூடிமறைத்தது ஏன்?சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி


விழுப்புரத்தில்சிறுமி கூட்டுபாலியல் தொல்லைக்கு ஆளானதை போலீஸ் மூடிமறைத்தது ஏன்?சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் சிறுமி கூட்டுபாலியல் தொல்லைக்கு ஆளானதை போலீஸ் மூடிமறைத்தது ஏன்? என்று சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

விழுப்புரம்



விழுப்புரம் அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் எம்.பி. நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய சம்பவத்தை மறைத்து இருக்கிறார்கள். கடந்த 26, 27-ந் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் அனைத்து துறை ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது, விழுப்புரத்தில் வடமாநில தொழிலாளியின் பெண் குழந்தை 4 சிறுவர்களால் கூட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார். இதை வீடியோ எடுத்தும் இருக்கிறார்கள். இதுபற்றி தொடக்கப்பள்ளி ஆசிரியர் விழுப்புரம்அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

3 நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு

முதல்-அமைச்சர் விழுப்புரத்தில் இருந்த நேரத்திலேயே சம்பவத்தை மூடி மறைத்தது ஏன்?. இதற்கு காரணம் என்?. முதல்-அமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டதா?, இல்லையா?. 3 நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டதன் நோக்கம் என்ன?.

தமிழக நிதி அமைச்சர் பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ உண்மை என்றால் மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இது உண்மை இல்லையென்றால் ஏன் வெளியிட்டவர் மீது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதுவரை ஏன் புகார் கொடுக்கவில்லை?.

அவசரஅவசரமாக சட்டம்

மத்திய அரசே 12 மணி நேரம் வேலை என்பதை கொண்டு வர யோசிக்கும் போது தமிழக அரசு அவசர அவசரமாக 12 மணி நேரம் வேலைக்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

மக்களை பற்றி சிந்திக்காமல் அவசர அவசரமாக சட்டங்களை அறிவிக்க வேண்டியது, நிறைவேற்ற வேண்டியது. பின்னர் எதிர்ப்பு வந்தவுடன் வாபஸ் பெற்று கொள்ள வேண்டியது. இதுதான் இந்த அரசின் சாதனை.

எங்கள் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது அல்ல. எப்போதோ கூறிவிட்டார். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என்றார் அவர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டி மேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், எசாலம் பன்னீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story