யானை தாக்கி காவலாளி பலி


யானை தாக்கி காவலாளி பலி
x
தினத்தந்தி 10 Jun 2023 7:00 PM GMT (Updated: 10 Jun 2023 7:01 PM GMT)

கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

காவலாளி

தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை அருகே கலைமான் நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் வேல்துரை (வயது 28). இவர் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்று பகுதியில் தனியார் தோட்டத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.

யானை தாக்கியது

கடந்த மாதம் 16-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மலைப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை தோட்டத்திற்குள் புகுந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேல்துரை தப்பி ஓட முயன்றார்.

ஆனால், யானை அவரை தாக்கி தனது துதிக்கையால் தூக்கி வீசிச் சென்றது. இதில் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர் தனது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனே அவர்கள், கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய வேல்துரையை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் வேல்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story