கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தஞ்சையில் டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்டதுடன், வாலிபர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், ஜூன்.3-

தஞ்சையில் டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்டதுடன், வாலிபர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாலிபர்

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சை கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் இந்த கொலை தொடர்பாக கரந்தை பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (26), கீழ அலங்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவக்குமார் (25), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மேலும் கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கொலை நடந்த அன்று மாலை கரந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைதான 3 பேரும் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் விக்னேஷ், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய, தஞ்சைமாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து, தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


Next Story