விபத்துக்குள்ளான வேனில் ரூ.6.82 லட்சம் குட்கா சிக்கியது


விபத்துக்குள்ளான வேனில் ரூ.6.82 லட்சம் குட்கா சிக்கியது
x

கிருஷ்ணகிரியில் சாலையில் விபத்துக்குள்ளான வேனை போலீசார் சோதனை செய்த போது ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள குட்கா சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

விபத்தில் சிக்கிய வேன்

கிருஷ்ணகிரியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை, ஆவின் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து வேன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த கிருஷ்ணகிரி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் விபத்து நடந்தவுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர்.

குட்கா பறிமுதல்

அதில் ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்து 504 மதிப்பிலான 926 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதும், பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வேன் டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story