மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2023 7:00 PM GMT (Updated: 9 Feb 2023 7:01 PM GMT)

சாணார்பட்டி போலீஸ் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாணார்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, செயலாளர் பகத்சிங், மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாணார்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கமர்தீன் (வயது 57) என்பவருக்கும் அவருடைய உறவினருக்கும் நில பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அவருடைய உறவினர்கள் கமர்தீனை தாக்கி அவதூறாக பேசினர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் சட்டப்பிரிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story