மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு


மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

வைத்தீஸ்வரன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஜமுனா என்கிற மீனா(வயது 36) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீட்கப்பட்டார். பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சமூக சேவைக்காக பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் கார்டன் மறுவாழ்வு மையத்தில் மனநலம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஜமுனாவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

உறவினர்களிடம் ஒப்படைப்பு

தற்போது முழுமையாக குணமடைந்த ஜமுனா தனது குடும்பத்தினர் வசிக்கும் இடத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரியப்படுத்தி உள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாகவும், கார்டன் மனநலம் மறுவாழ்வு மையத்தினரால் ஜமுனாவின் தந்தையான ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் செங்காபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா, ஜமுனாவின் தங்கை கணவர் சீக்காட்டி நரேஷ் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அப்போது இளம் பெண் ஜமுனாவின் உறவினர்கள் மாவட்ட கலெக்டருக்கும், சீர்காழி கார்டன் மனநல காப்பக நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.


Related Tags :
Next Story