அந்தரத்தில் தொங்கியபடி பொதுமக்களை அச்சுறுத்தும் முத்தாறு பாலம்


அந்தரத்தில் தொங்கியபடி பொதுமக்களை அச்சுறுத்தும் முத்தாறு பாலம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே அந்தரத்தில் தொங்கியபடி பொதுமக்களை அச்சுறுத்தும் முத்தாறு பாலம் பள்ளம் தோண்டி போக்குவரத்து தடை

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாவடிபட்டு-அகரம் சேஷசமுத்திரம் கிராமங்களுக்கு இடையே செல்லும் முத்தாற்றின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சேஷமுத்திரம், அகரம், நெடுமானூர், சோழம்பட்டு ஆகியபகுதிமக்கள் தாவடிபட்டு வழியாக கச்சிராயப்பாளையம் பகுதிக்கும், அதேபோல் மாதவச்சேரி, கரடிச்சித்தூர், பால்ராம்பட்டு, கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தாவடிப்பட்டு, முத்தாறு பாலம், சேஷமுத்திரம் வழியாக சங்கராபுரத்துக்கும் சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த பருவமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலத்தின் அடிப்பகுதியில் தூணை தாங்கி நின்ற ராட்சத சிமெண்டு கட்டைகளை சுற்றி மண் அரிப்பு ஏற்பட்டதால் அவை உடைந்து சேதம் அடைந்தன. இதனால் பாலத்தை தாங்கி பிடித்து கொண்டிருந்த தூண்கள் அந்தரத்தில் தொங்கியபடி இப்ப விழவோ? எப்ப விழவோ? என்று பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால் பாலத்தின் மீது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் யாரும்செல்லாமல் இருப்பதற்காக தாவடிப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாலத்தின் இரு புறமும் சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கச்சிராயப்பாளையத்துக்கும்., வந்து செல்ல முடியாத நிலையில் கச்சராயபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சங்கராபுரம் பகுதிக்கும் சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்தரத்தில் தொங்கியபடி பொதுமக்களை அச்சுறுத்திகொண்டிருக்கும் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story