நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்


நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்
x

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு நேற்று 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

அனுமன் ஜெயந்தி

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் வளாகம் முழுவதும் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

இதற்கிடையே 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணிகள் நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து அவற்றை மாலைகளாக தொடுக்கும் பணி தொடங்கியது. மேலும் பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய வசதியாக இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

1 லட்சத்து 8 வடைகள்

பின்னர் நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் பலர் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் ஆஞ்சநேயருக்கு எண்ணெய், தயிர், தேன், நெய், சந்தனம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பட்டாச்சாரியார்கள் ஆஞ்சநேயருக்கு குடம், குடமாக பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதன் பிறகு ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

இதில் நாமக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் துளசி மற்றும் வெற்றிலை மாலைகளை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட்டனர். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குடிநீரூம், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதனிடையே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நாமக்கல் - கோட்டை சாலையில் வாகன போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

போலீசார் கண்காணிப்பு

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மணிமாறன், சந்திரமவுலி ஆகியோர் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.


Next Story