ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப சாவு


ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப சாவு
x

களக்காடு அருகே ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

8-ம் வகுப்பு மாணவன்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஜெ.ஜெ.நகர் கீழ காலனி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இவர் தேசிய ஊரக திட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இவர்களில் கடைசி மகன் முகிலன் (13), களக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தான்.

ஊஞ்சலில் தவறி விழுந்து...

பின்னர் முகிலன் தனது வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடியவாறு, டி.வி. பார்த்து கொண்டிருந்தான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்தான்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முகிலன் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினான். உடனே அவனை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முகிலனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சைமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த முகிலனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு அருகே ஊஞ்சலில் ஆடியபோது தவறி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story