பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது


பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது
x

ஆற்காட்டில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

பட்டா மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 43). இவரின் உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு ஆவணத்தில் புறம்போக்கு நிலமாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை ரத்து செய்து தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என சகாதேவன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தார்.இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி அந்த நிலத்தை லோகபிள்ளையின் வாரிசு தாரர்களுக்கு பட்டா மாற்றம் செய்து தர அப்போதைய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

அதனைத் தொடர்ந்து நில அளவையர் மற்றும் வருவாய் துறையினர் நிலத்தை அளவீடு செய்தனர். பின்னர் பட்டா மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆற்காடு தாசில்தார் சுரேஷ் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் தர முடியாத சகாதேவன் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.15 ஆயிரத்தை சகாதேவனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.

தாசில்தார் கைது

இதையடுத்து சகாதேவன் அந்த பணத்தை தாசில்தார் சுரேசிடம் கொடுத்துள்ளார். அதனை அவர் தனது ஜீப் டிரைவர் பார்த்திபனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் டிரைவர் பார்த்திபனிடம் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசில்தார் சுரேஷ், டிரைவர் பார்த்திபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story