வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி


வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
x

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி நடந்துள்ளது.

பெரம்பலூர்

குடிக்க தண்ணீர் கேட்டு...

பெரம்பலூர்-அரியலூர் ரோடு மின் நகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். தர்மராஜ் நேற்று காலை 11 மணிக்கு கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தர்மராஜின் மனைவி நித்யா (வயது 23) மட்டும் தனியாக இருந்துள்ளார்.

காலை 11.30 மணியளவில் தர்மராஜின் வீட்டிற்கு ஆண் ஒருவர் வந்துள்ளார். அவர் தண்ணீர் கேன் போட வந்திருப்பதாக கூறி வீட்டின் கதவை தட்டியுள்ளார். நித்யா கதவை திறந்து அந்த நபரிடம் தண்ணீர் கேன் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் வீட்டின் உள்ளே செல்வதற்காக திரும்பினார். அப்போது அந்த நபர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் சென்று கொண்டிருந்த நித்யாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார்.

கூச்சலிட்டார்

உடனடியாக சுதாரித்து கொண்ட நித்யா சங்கிலியை கையால் இறுக்கமாக பிடித்து கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதையடுத்து நித்யா இந்த சம்பவம் தொடர்பாக தனது கணவர் தர்மராஜுக்கு தகவல் தெரிவித்ததோடு, பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் தங்க சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பெண்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story