பெரியபாளையம் பஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி


பெரியபாளையம் பஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
x

பெரியபாளையத்தில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

திருவள்ளூர்

பவானி அம்மன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி 15 ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்வர். இந்நிலையில், வார விடுமுறை நாட்கள் ஆன சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வாகனங்களில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.

சாலை ஆக்கிரமிப்பு

ஆனால், பெரியபாளையம் பஜார், பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, பெரியபாளையம்-கன்னிகைப்பேர் நெடுஞ்சாலை, பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருப்பதாலும், கடைகளுக்கு முன் பக்கத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கோரிக்கை

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் பெரியபாளையம் மேம்பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியை கடக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விரைவான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story