'ஹெல்மெட்' விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி


ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
x

திருவண்ணாமலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ரோஜா பூ வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் 'ஹெல்மெட்' அணிந்து வந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ரோஜா பூ வழங்கினார்.

ரோஜா பூ கொடுத்து வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் 'ஹெல்மெட்' விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை தேரடி வீதியில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு 'ஹெல்மெட்' விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை வழங்கினார்.

அப்போது 'ஹெல்மெட்' அணிந்தவர்களுக்கும், காரில் 'சீட் பெல்ட்' அணிந்து வந்தவர்களுக்கும் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதுகுறித்து காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 10 முதல் 15 நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

அபராதம்

பின்னர் 'ஹெல்மெட்' அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதற்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வில்லை என்றால் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 'ஹெல்மெட்'டை தொடர்ந்து மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுப்பது போன்றவை குறித்து படி, படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தேவையான இடங்களில் பேரிகார்டுகள், ஒளி எதிரொலிப்பான், சிக்னல் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காந்தி சிலை அருகில் கிராமிய கலைஞர்கள் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், தயாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story