தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உயர்மட்டக்குழு திடீர் ஆய்வு `அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என தகவல்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உயர்மட்டக்குழு திடீர் ஆய்வு  `அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்
x

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தமிழக அரசின் உயர்மட்டக்குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குழு தலைவர் கண்ணன் கூறும்போது, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்றார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தமிழக அரசின் உயர்மட்டக்குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குழு தலைவர் கண்ணன் கூறும்போது, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும், என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி காரணமாக 13 பேர் இறந்தனர். இதனைதொடர்ந்து ஆலைக்கு `சீல்' வைக்கப்பட்டது. அதன்பிறகு ஆலையை திறக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில், ஆலை வளாகத்தில் எந்திரங்கள் பழுதடைந்து கசிவு ஏற்படுவதாகவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், வலியுறுத்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உயர்மட்டக்குழு

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? ஏதேனும் சேதம் அடைந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைத்து உள்ளது.

சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்- செயலாளர் கண்ணன் தலைமையில், மதுரை தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப்பிரிவை சேர்ந்த இணை இயக்குனர் (பதிவாளர்) ஆர்.ரவிச்சந்திரன், மதுரை தீயணைப்பு படை துணை இயக்குனர் என்.விஜயகுமார், அண்ணா பல்கலைக்கழக சிவில் என்ஜினீயரிங் பேராசிரியர் ஆர்.செந்தில், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் வி.சம்பத், நெல்லை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.விஜயலட்சுமி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

கால அவகாசம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் ஆலையை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி வந்தனர். ஆனால், எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் மறுநாள் திரும்பி சென்றனர். தொடர்ந்து ஏப்ரல் மாதமும் குழு வருகை தந்தது. ஆனால், அப்போதைய சூழ்நிலை காரணமாக மீண்டும் குழு திரும்பி சென்றது.

இதற்கிடையே, குழு ஆய்வு செய்வதற்கான அவகாசம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், ஆய்வு மேற்கொள்ளாததால் இதற்கான அவகாசம் நாளை (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு

இந்தநிலையில் உயர்மட்டக்குழுவினர் நேற்று காலையில் தூத்துக்குடிக்கு திடீரென வந்தனர். காலை 9 மணி அளவில் மாவட்ட அளவிலான குழுவினருடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றனர். அங்கு தாமிர உருக்கு ஆலை எந்திரங்கள் நிலை, ஏதேனும் ரசாயன கழிவு கசிவு ஏற்பட்டு உள்ளதா?, கட்டிடங்கள் உறுதியாக-பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது பற்றியும், பசுமை வெளிகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 4 மணி நேரமாக நீடித்த இந்த ஆய்வு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்பிறகு உயர்மட்டக்குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவை சேர்ந்த உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்தியராஜ், தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிறைமதி, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அரசிடம் அறிக்கை தாக்கல்

இதுகுறித்து உயர்மட்டக்குழு தலைவர் கண்ணன் கூறியதாவது:-

தொழிற்சாலை கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்த அம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழு ஏற்கனவே ஆய்வு செய்ய வந்தபோது உள்ளாட்சி தேர்தல் நேரமாக இருந்ததால் ஆய்வு தள்ளிப்போனது. தற்போது ஆய்வை நிறைவு செய்து உள்ளோம்.

ஆலை வளாகத்தில் கட்டிடங்களின் உறுதித்தன்மை, என்னென்ன ரசாயனம் அங்கு சேமித்து வைக்கப்பட்டு உள்ளது, பசுமை வெளிகள் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்தோம். ஆலையில் சில இடங்களில் துருப்பிடித்து உள்ளது. இந்த குழுவின் ஆய்வு அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யும்போது, இந்த அறிக்கை அதனுடன் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story