துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் கைது

துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் கைது
கோவை
கோவை புலியகுளத்தில் வீட்டில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரவுடிகள் கொலை
கோவை மாநகர பகுதியில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ரவுடி சத்தியபாண்டி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்தனர்.
மேலும் மாநகர பகுதியில் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதுபோன்று சத்தியபாண்டி கொலை வழக்கில் கைதான சஞ்செய் ராஜா என்பவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் சோதனை
இதை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்து முன்னணி கோவை மாவட்ட துணைத்தலைவர் அயோத்தி ரவி என்பவர் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில், உதவி கமிஷனர் சதீஷ் மற்றும் போலீசார் கோவை புலியகுளத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இருக்கும் அயோத்தி ரவி வீட்டுக்கு நேற்று சென்றனர். பின்னர் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அயோத்தி ரவி வீட்டில்தான் இருந்தார்.
துப்பாக்கிகள் பறிமுதல்
வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவருடைய வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல் ரகம்), 5 தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அயோத்தி ரவியை போலீசார் பிடித்து போத்தனூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அவரிடம் இந்த துப்பாக்கிகளை எங்கிருந்து வாங்கியது? வாங்கி கொடுத்தது யார்? இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ள என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
15 தோட்டாக்கள் எங்கே?
கைது செய்யப்பட்ட அயோத்தி ரவி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 துப்பாக்கிகளில் தலா 10 தோட்டாக்கள் என்று 20 தோட்டாக்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவரிடம் 5 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன.
எனவே மீதமுள்ள 15 தோட்டாக்கள் எங்கே?, அவற்றை அவர் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிகளை அவர் நண்பர்கள் மூலம் சென்னையில் வாங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனவே ரவுடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஏற்கனவே கோவையில் பிரபல ரவுடியிடம் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






