தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:47 PM GMT)

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி

உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ராமேசுவரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓலைக்குடாவில் உள்ள ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் பகுதியில் உள்ள சூசையப்பர் பட்டினம் ஆலயத்திலும் பங்கு தந்தை சுவாமிநாதன் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாம்பனில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் பங்கு தந்தை சேசுஜெயராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ராமநாதபுரத்தில் உள்ள ரோமன் சர்ச் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சாயல்குடி

சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. மாதா கோவில் பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். சாயல்குடி தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, நிர்வாகி ரோஷன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ ஈரால் பங்குத்தந்தை அலெக்ஸ் கலந்து கொண்டார். இதில், மாதா கோவில் தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோகராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், முன்னாள் தலைவர் அந்தோணி ராஜ், முன்னாள் செயலாளர் அருள் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உயிர்த்தெழுதல்

இதுகுறித்து தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டின ஆலய பங்குத்தந்தை சுவாமிநாதன் கூறும்போது, இந்த ஆண்டு தவக்காலமானது பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கியது. 40-வது நாளில் இருந்து தவக்காலம் பூஜை தொடங்கி விடும். அந்த ஒரு வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படும். அதில் முதலாவதாக குறுத்தோலை ஞாயிறு தினத்தன்று இறை மக்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக வந்து ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். பின்னர் புனித வியாழன் அன்று குருத்துவத்தை ஏற்படுத்தியதை மையப்படுத்தி பாதம் கழுவும் பூஜை நடைபெறும்.

ஏசு சிலுவையில் அறைந்த தினத்தை குறிக்கும் வகையில் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு அன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். சிலுவையில் அறையப்பட்ட தினத்தில் இருந்து 3-வது நாளில் ஏசு உயிர்த்தெழுதல் ஈஸ்டர் தினவிழாவாக கொண்டாடப்படுகிறது என்றார்.


Next Story