குளித்தலையில் குதிரை வண்டி பந்தயம்


குளித்தலையில் குதிரை வண்டி பந்தயம்
x

குளித்தலை அருகே குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூர்

பந்தயம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ரேக்ளா ஷோக்தாரிகள் சங்கம் மற்றும் மையிலாடி ஊர் பொதுமக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. குளித்தலை - மணப்பாறை சாலையில் மையிலாடி வாய்க்கால் பாலம் பகுதியில் நடந்த இந்த ரேக்ளா பந்தயங்களை குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்.

இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை, தேன் சிட்டு, சிறிய மற்றும் பெரிய ஒற்றை மாடு, இரட்டை மாடு போன்ற பந்தயங்கள் நடத்தப்பட்டன.

பரிசுகள் வழங்கல்

இந்த பந்தயத்தில், பந்தயம் தொடங்கிய இடத்தில் இருந்து ஒவ்வொரு பந்தயத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட எல்லை தூரத்தை தொட்டு மீண்டும் பந்தயம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்து முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடு, மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்பந்தயங்களில் பங்கேற்றனர்.

பாதுகாப்பு பணி

திரளான ரேக்ளா பந்தைய ரசிகர்கள், பொதுமக்கள் சாலையோரம் நின்றுகொண்டு ஒவ்வொரு பந்தயத்தையும் கண்டுகளித்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். குளித்தலை போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story