தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்தது


தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்தது
x

புதுக்கோட்டையில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழை நீர் சூழ்ந்தது. ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை

மழைநீர் சூழ்ந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. ஆங்காங்கே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழைநீர் வடிகாலில் இருந்து சாலையில் கழிவுநீரோடு மழைநீரும் கலந்து ஓடியது. இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையின் காரணமாக மாவட்ட விளையாட்டரங்கத்தில் மழைநீர் குளம் போல தேங்கியது. புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் அருகே உள்ள தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை தகவல் மற்றும் பயிற்சி மைய அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்து தேங்கி நின்றது. இதனால் நேற்று காலை அந்த அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி யடைந்தனர்.

மழை அளவு விவரம்

இதேபோல அந்த அலுவலகத்தின் அருகே நேரு யுவகேந்திரா அலுவலகமும் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு சென்றவர்கள் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்றனர். தேங்கிய மழை நீரை அகற்றும் பணி இன்று மாலை நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை அலுவலக ஊழியர்கள், அருகில் மற்றொரு இடத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமர்ந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-11, பெருங்களூர்-29, புதுக்கோட்டை-89, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-5,80, கறம்பக்குடி-2.40, மழையூர்-17.40, கீழணை- 18.40, திருமயம்-9.20, அரிமளம்-15.20, அறந்தாங்கி-17.40, ஆயிங்குடி-46.20, நாகுடி-70,20, மீமிசல்-10.20, ஆவுடையார்கோவில்-38.40, மணமேல்குடி-6, இலுப்பூர்-1, குடுமியான்மலை-2, அன்னவாசல்-5, விராலிமலை-10.20, உடையாளிப்பட்டி-20, கீரனூர்-14, பொன்னமராவதி-2, காரையூர்-3.


Next Story