நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் உமா தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் உமா தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2023 7:00 PM GMT (Updated: 8 Jun 2023 2:12 AM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

29 விடுதிகள்

தமிழ்நாடு அரசால் நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என மொத்தம் 29 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கிற மாணவ, மாணவிகளும், கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

தகுதிகள்

பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்குள் மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. விடுதிகளில் சேரும் போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story