நர்சிடம் சில்மிஷம் செய்த ஓட்டல் ஊழியர் கைது


நர்சிடம் சில்மிஷம் செய்த ஓட்டல் ஊழியர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2023 9:45 PM GMT (Updated: 3 Oct 2023 9:46 PM GMT)

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நர்சுக்கு சில்மிஷம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹஸ்தினாபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். திருமணமான இவர், நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ந் தேதி கோவை வந்தார். பின்னர் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற அவர்கள் அங்கு சில நாட்கள் தங்கி சுற்றிப்பார்த்து விட்டு நேற்று முன்தினம் கோவை திரும்பினர். இதையடுத்து அவர்கள் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்து, தவறாக நடக்க முயன்றார்.

ஓட்டல் ஊழியர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதில், நர்சிடம் சில்மிஷம் செய்தது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சந்தோஷ் (வயது 40) என்பதும், அவர் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சந்தோஷ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காந்திபுரம் பஸ் நிலையத்தில் நர்சிடம் ஓட்டல் ஊழியர் ஒருவர் சில்மிஷம் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story