'நீட்' தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து


நீட் தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து
x
தினத்தந்தி 7 May 2023 6:29 PM GMT (Updated: 7 May 2023 6:31 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 2,039 பேர் எழுதினர். இந்த தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அரியலூர்

உயிரியல் கேள்விகள் எளிது

அரியலூரை சேர்ந்த ஜனனி:- 'நீட்' தேர்வுக்கான நுழைவுத் தேர்வில் உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன. இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன.

செங்கராயகட்டளை பகுதியை சேர்ந்த மாணவர் சரவணன்:- நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் உயிரியல் கேள்விகள் சுலபமாக இருந்தன. இயற்பியல் பகுதியில் மட்டும் கணிதம் தொடர்பான கேள்விகள் சற்று கடினமாக இருந்தது.

இயற்பியல், கணிதம் கடினம்

கீழப்பழுரை சேர்ந்த உமா மகேஸ்வரி:- உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் சுலபமாக இருந்தன. ஒரு சில கேள்விகள் குழப்புவதாகவும், சிந்தித்து பதில் அளிக்க வேண்டியதாக இருந்தது. இயற்பியல் பகுதியில் கணிதம் சம்பந்தமான கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மற்றபடி அனைவரும் தேர்வில் வெற்றி பெற கூடிய அளவிலேயே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

கீழப்பழுரை சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி:- மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு அனுப்பும் முன்பு நடைபெற்ற சோதனைகள் சற்று கடினமாக இருந்தது. தேர்வை பொறுத்தவரை சுலபமென்றே கூறலாம். இயற்பியல், வேதியியல் பகுதி கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. அனைவருக்குமே உயிரியல் கேள்விகள் சுலபமாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story