சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:45 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்


மனித சங்கிலி போராட்டம்


தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று சமூக நல்லிணக்க மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி தலைமை தாங்கினார்.


இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


வேடசந்தூர்


வேடசந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலை முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தமிழன், வடமதுரை ஒன்றிய செயலாளர் முத்துகணேசன், வேடசந்தூர் ஒன்றிய துணைச்செயலாளர் விடுதலைவளவன், மாவட்ட சமூக ஊடக மைய பொறுப்பாளர் மாதவன், விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது பக்ருதீன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரவேந்தன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர செயலாளர் ஷேக் அப்துல்லா, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


பழனி, நத்தம்


இதேபோல் பழனியில், மயில் ரவுண்டானா அருகே சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இந்த மனித சங்கிலியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


நத்தம் பஸ்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் மயில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர் சேட், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி சண்முகவள்ளி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


நிலக்கோட்டை


நிலக்கோட்டையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் போது ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலக்கோட்டை தொகுதி செயலாளரும், முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவருமான ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் மனித சங்கிலியாக பெரியகுளம்-வத்தலக்குண்டு ரோட்டில் நிலக்கோட்டை பஸ்நிலையத்திலிருந்து, போலீஸ் நிலையம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து நின்றனர். போராட்டத்தின்போது திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒலிப்பெருக்கியில் பேச முடியவில்லை. இதை கண்டித்து போலீசாரிடம், போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.


இதில் காங்கிரஸ் கட்சி நிலக்கோட்டை வட்டார தலைவர் கோகுல்நாத், திராவிட கழக நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருப்பதி, மாநில மாணவரணி துணை செயலாளர் மணிகண்டன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது ரிஜால், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தக்பீர் அலி, டிசம்பர் 3 இயக்க மாநில செயலாளர் மோகன்ராஜ், ஆதித்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் சிவமுருகேசன், தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story