கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை


கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை
x

ரூ.19 லட்சம் கடனுக்காக ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம்,

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற 2 மகன்களும், தமிழரசி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ராமகவுண்டர் தனியார் கல்லூரி ஒன்றில் ஓமியோபதி டாக்டராகவும், ராமவேல் ஆட்டோ ஓட்டியும் வருகிறார். ராஜேந்திரன் தனது மகன்களுடன் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமவேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது கீழ்தளத்தில் உள்ள அறையில், வாயில் நுரை தள்ளியப்படி தனித்தனி கட்டிலில் பெற்றோர் இறந்து கிடந்ததை பார்த்து ராமவேல் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரன், சாந்தியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கணவன்-மனைவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ராஜேந்திரன் கடந்த 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.15 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதன்பிறகு அவர் அந்த பணத்துக்குரிய வட்டி கட்டவில்லை. இதனால் வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக 2018-ம் ஆண்டு வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடன் வாங்கினார்

இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நடேசன் (75) மூலம் உலகநாதன் (47) என்பவரிடம் ரூ.19 லட்சம் கடன் வாங்கினார். இந்த பணத்தை கொண்டு வங்கி கடனை அடைத்தார். ஆனால் அவரால் உலகநாதனிடம் பெற்ற கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. தற்போது கந்து வட்டி சேர்த்து ரூ.40 லட்சம் உடனே தருமாறு கடன் கொடுத்தவர்கள் ராஜேந்திரனை மிரட்டி உள்ளனர். இதனாலேயே விரக்தியில் ராஜேந்திரன், தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 பேர் கைது

பின்னர் கந்துவட்டி கேட்டு ராஜேந்திரனை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக உலகநாதன், நடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story