மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி


தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி பலியானதால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி பலியானதால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த பெரியகுக்குண்டி கிராமம் செய்யாறு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு சங்கரி, தேவி என்ற 2 மகள்களும், பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

சரவணன் குடும்பத்தினர் விவசாய நிலத்தின் அருகில் சொந்த இடத்தில் வீடு கட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே வசித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கியது

இந்த நிலையில் சரவணன் நேற்று அதிகாலை தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அவரது நிலத்தின் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி கீழே அறுந்து விழுந்து கிடந்தது. சரவணன் அதனை கவனிக்காமல் மிதித்து விட்டார். அடுத்த வினாடியே அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அலறியவாறே சுருண்டு விழுந்தார்.

சத்தம் கேட்டு அவரது மனைவி சாந்தியும் ஓடிவந்துள்ளார். அவரும் கவனிக்காமல் மின்சார உயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆற்காடு தாலுகா போலீசார் மற்றும் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.

அதற்குள் அங்கு சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி முின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story