அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் கொன்றேன்
அடித்து துன்புறுத்தியதால் கொன்றதாக சமையல் தொழிலாளி கொலை வழக்கில் கேரளாவில் கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்தார்.
கோவை
அடித்து துன்புறுத்தியதால் கொன்றதாக சமையல் தொழிலாளி கொலை வழக்கில் கேரளாவில் கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்தார்.
கேரளாவில் பதுங்கியவர் கைது
கோவை ஆடீஸ் வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் சமையல் தொழிலாளி ராஜேஷ் (வயது48) என்பவர் கடந்த 18-ந்தேதி உருட்டுகட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அவரை மற்றொரு சமையல் தொழிலாளியான பென்னி (58) என்பவர் அடித்து கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பென்னி ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பிச்சென்றார்.
எனவே கோவை போலீசார் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் பதுங்கி இருந்த பென்னியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் நேற்று கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பென்னி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நான் கோவை ஆடீஸ் வீதி பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சமையல் தொழிலாளியான ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் சேர்ந்து சமையல் வேலைக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அந்த நேரங்களில் எல்லாம் ராஜேஷ் என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்துவார்.
காலில் விழுந்து கெஞ்சினேன்
இந்த நிலையில் நான் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு ஆடீஸ் வீதி பிளாட்பாரத்தில் படுத்திருந்தேன். அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த ராஜேஷ் சரமாரியாக என்னைஅடித்து உதைத்தார். அப்போது நான், வலி தாங்க முடியாமல் அவரது காலில் விழுந்து கெஞ்சினேன். இந்த சம்பவத்துக்கு பின்னர் ராஜேஷ் மீது எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
உடனடியாக காந்திபுரம் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுகுடித்தேன். அப்போது ராஜேசை கொல்வது என்று முடிவு செய்தேன். பின்னர் மீண்டும் ஆடீஸ் வீதிக்கு வந்து சேர்ந்தேன். அப்போது ராஜேஷ் பிளாட்பார மேஜையில் படுத்து இருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு கொலைவெறி ஏற்பட்டது. எனவே அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக அவரது தலையில் தாக்கினேன்.இதில் ராஜேஷ் இறந்து விட்டார். அதன்பிறகு உருட்டுக்கட்டையை வீசி விட்டு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பி சென்றேன். போலீசார் என்னை சந்தேகப்பட மாட்டார்கள் என கருதினேன். ஆனால் போலீசார் துப்பறிந்து, கேரளாவில் பதுங்கியிருந்த என்னை மடக்கி பிடித்து விட்டனர்.
இவ்வாறு போலீசாரிடம் பென்னி வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான பென்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.