31,824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை- கலெக்டர்


31,824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை- கலெக்டர்
x
தினத்தந்தி 20 Dec 2022 7:15 PM GMT (Updated: 20 Dec 2022 7:15 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 31,824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 31,824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 44 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கி கலெக்டர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய அடையாள அட்டை

தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31,824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19,439 பேருக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை

மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோய், தொழுநோய், மற்றும் நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், மாணவ, மாணவிகளுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story