தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்க உடனடி நடவடிக்கை: மத்திய-மாநில அரசுகளுக்கு, ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்க உடனடி நடவடிக்கை: மத்திய-மாநில அரசுகளுக்கு, ராமதாஸ் வலியுறுத்தல்
x

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 25 நாட்களாக இல்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி இதுவரை கைதான அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனால், மீனவர் சமுதாயம் நிம்மதி அடைந்த நிலையில் தான் அடுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருக்கிறார்.

இதனால் பயன் ஏற்படாது. இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும். இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், 100-க்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story